அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.
இளையராஜாவின்
இசை வரலாறு என்பது திரையிசையின் வரலாறுதான். இந்த மையப்புள்ளியைக் கொண்டுதான் முன்னும்
பின்னுமான இசை வரலாற்றை எழுத முடியும். தமிழ்த்திரையிசையின் தொடக்க காலககட்டமான
முப்பது மற்றும் நாற்பதுகளில் சினிமா இசை என்பது கர்னாடக இசை மரபும் நாடக இசைப்
பாணியும் கலந்த ஒன்றாகவே இருந்தது. இதில் பாடகர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஐம்பதுகளில்தான்
இது மாற்றம் பெறுகிறது. இந்துஸ்தானி இசையும், மேற்கத்திய
இசையும் தமிழ்த் திரையிசையில் கலந்து ஒரு புதிய இசைப்பாணி உருவானது. இதனை உருவாக்கியதில்
எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஜி.லிங்கப்பா போன்ற இசையமைப்பாளர்களின் பங்கினை மறக்க முடியாது.
என்றாலும் எம்.எஸ்.விஸ்வநாதனும் கே.வி.மகாதேவனும்தான் இந்த இசைப்பாணியைப் பெருமளவு
வளர்த்தவர்கள். அவர்களுக்கு முன்னரே இந்த இசைப் பாணி இந்தியில் அறிமுகமாகி
வளர்ந்திருந்தது. அதைத் தமிழுக்கேற்ப அவர்கள் மெருகேற்றித் தந்தார்கள். தமிழுக்கான
தனித்ததொரு இசை வடிவம் இளையராஜாவுக்குப் பின்னரே உருவாகிறது. அதற்கு முன்னர்
சராசரியாக மூன்றரை நிமிடங்கள் இருந்த பாடல்களை நான்கரை நிமிடங்களாக மாற்றினார்.
இரண்டு சரணங்களுக்கும் தனித்தனியான இடையிசை அமைக்கும் பாணியை உருவாக்கினார்.
இளையராஜா
அறிமுகமான எழுபதுகளில் தமிழ்த்திரையிசையில் ஒரு பெரிய தேக்கம் நிலவியது. எம்.எஸ்.வி.,
கே.வி.மகாதேவன் போன்ற பெரும் இசையமைப்பாளர்களின் தலைசிறந்த
பாடல்கள் வெளிவந்த காலமாயினும், ஏதோவொரு மாற்றத்துக்காகத்
தமிழ்க்காதுகள் காத்திருந்தன. அன்னக்கிளி மூலம் அந்தக் காத்திருப்பு நிறைவுக்கு
வந்தது. அதில் தொடங்கிய பெருவெள்ளம் அடுத்த இரு பத்தாண்டுகளுக்குப் பாய்ந்தது.
நிறைய படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால்
கொண்டாடப்பட்டன. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்,
நடிகர்களும் அவருடைய இசைக்காகக் காத்திருந்தனர். மோகன், ராமராஜன் போன்ற நாயகர்கள் உருவாகி வளர்ந்தது இளையராஜாவால்தான். பிரபு,
கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சியில் இவருடைய பாடல்களுக்குப்
பெரும்பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் - சிவாஜிக்குப் பிறகு எண்பதுகளில் ரஜினி – கமல்
எனும் இருநிலை நாயகப் பிம்பம் உருவானதில் இளையராஜாவுக்கு முக்கியப்பங்கு உண்டு. பல
இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் பாடல்களை நம்பியே படம் எடுத்து
வெற்றியும் பெற்றார்கள். தமிழ் சினிமாவில் இசையால் தனிப்பெரும் ராஜ்ஜியம் ஒன்றை
அவர் நடத்திக் காட்டினார்.
தமிழ்
சினிமா இசையின் பொற்காலம் என்றால் அது எண்பதுகள்தான். இந்தப் பொற்காலம் தனியொரு
மனிதனால் நிகழ்ந்தது என்பதே அதிசயம்தான். இக்காலத்தில் எம்.எஸ்.வி,
சங்கர் – கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், டி.ராஜேந்தர் என்று பலரும்
இசையமைத்தாலும் இந்தப் பொற்கால இசையின் மையமாக இளையராஜா இருந்தார். நாயகர்களைப்
புகழ்ந்து புனையப்பட்ட பாடல்களுக்கு மத்தியில் இளையராஜாவைப் புகழ்ந்து பாடல்கள்
எழுதப்பட்டன. ஊரெங்கும் போகும் உன் ராகங்களே, ராகங்கள்
தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு, நேற்று இல்லை
நாளை இல்லை எப்பவும் நான் ராஜா, புது ராகம் படைப்பதாலே நானும்
இறைவனே, ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது,
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே, இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே, சின்னத்
தாயவள் தந்த ராசாவே, ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல,
இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் என்று
எண்ணற்ற பாடல்கள் ராஜாவின் புகழ்பாடின. அவர் இசையமைக்காத படத்திலும் கூட
(சோலையம்மா) அவரின் புகழ் பாடும் பாடல் இடம்பெற்றது. மக்கள் கைதட்டி அவற்றை
ஏற்றனர். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்பில்லை.
டைட்டிலில் அவருடைய பெயருக்கு முன்னால் புதுப்புது பட்டங்கள் இடம்பெற்றன. ராகதேவன்,
மேஸ்ட்ரோ, இசைக்கோ, இசைஞானி,
(பார்த்திபன் ஒரு படத்தில் இசை அல்லது இளையராஜா என்று டைட்டில்
போட்டார்) என்றெல்லாம் பலப்பல பட்டங்கள் அவரைத் தேடி வந்தன.
இவற்றுக்கெல்லாம் தான் தகுதியானவர் என்பதைத் தன் இசையால் அவர் தொடர்ந்து
நிரூபித்தார்.
தன்னுடைய
பாடல்களுக்குப் பொருத்தமான பாடகர்களை அவர் தேர்ந்தெடுப்பது வியக்க வைக்கும்
ஒன்று. வேறு பாடகரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை கச்சிதமான
தேர்வுகளாக அவை இருந்தன. பெரும்பாலும் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், ஜானகி, சுசீலா
போன்ற பாடகர்கள் அவருடைய மெட்டுக்களுக்குக் குரல் தந்தார்கள். என்றாலும்
இளையராஜாவின் இசைக்கு மட்டுமேயான தனிக்குரல்களாக இல்லாத பொதுமைத் தன்மை
அவர்களிடம் இருந்தது. தன்னுடைய இசைக்கெனவேயான பிரத்தியேகக் குரலுக்கான தேடல்
அவரிடம் இருந்தது. எண்பதுகளில் உமா ரமணன், ஜென்சி, ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் போன்றவர்களை அவர்
அப்படி உருவாக்கினார். அதே போல் தொண்ணூறுகளில் மனோ, அருண்மொழி,
மின்மினி, சுவர்ணலதா போன்றவர்களைத்
தன்னிசைக்கான தனித்த குரல்களாக அவர் உருவாக்கினார்.
தான்
இசையமைத்த படங்களைத் தாண்டி, அவற்றுக்கான
தகுதியைக் கடந்து செல்லக் கூடிய இசையையும் பாடல்களையும் அவர் தந்தார். சிறிய,
பெரிய படங்கள் என்றெல்லாம் பாராமல் எல்லாவற்றுக்கும் உயர்தரமான – பல
நேரங்களில் உலகத்தரமான – இசையை அவர் கொடுத்தார். திரைக்கதையை உள்வாங்கி பாடல்களை
உருவாக்குவதில் அவரின் ஆற்றல் மிகப்பெரியது. அதாவது பாடலைக் கேட்கும் போதே
திரைக்கதையின் கூறுகளை உணர முடிகிற அற்புதத்தை அவர் பல படங்களில் சாதித்துக்
காட்டினார். கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘பாசமுள்ள பாண்டியரு’ பாடல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்று. ஊர் மக்கள் மகிழ்ச்சியாகப் பாடும் ஒரு
கொண்டாட்டப் பாடல்தான் அது. அதற்குத் தேவையான உற்சாகமும் துள்ளலும் அதில் சரியாக
இருக்கும். ஆனால் சரணத்தில் மனோ, சித்ராவின் குரல்களுக்குப்
பின்னணியில் வரும் கோரஸ் ஆலாபனையில் மெல்லிய சோகம் தெரியும். கொண்டாட்டமான
பாடலில் எதற்காக இந்த சோகத்தைக் கொண்டு வருகிறார் என்ற கேள்விக்கான பதில்
திரைக்கதையில் இருக்கிறது. படத்தில் அந்தப் பாடல் முடிந்ததும் அந்தக்
கொண்டாட்டத்தில் இருந்த பலரும் கொல்லப்பட்டு இறந்து போகிறார்கள். அந்தச்
சோகத்தைப் பாடலிலேயே கொண்டு வந்தது ராஜாவின் திரைக்கதை குறித்த பிரக்ஞை. இது
போல பல பாடல்களைச் சொல்ல முடியும். காதலர்கள் பாடும் அழகான டூயட் பாடல்களுக்குள்
மெலிதான சோகத்தைக் கலந்திருப்பார். இதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்தால்
திரைக்கதையில் அந்தக் காதலர்கள் பிரிவையோ, இழப்பையோ
சந்திப்பவர்களாக இருக்கும்.
பாடலின்
முன்னிசையுடன் பல்லவியைத் துறுத்தலின்றி இணைப்பதும், பல்லவியின் கடைசி வார்த்தையுடன் இடையிசையை இணைத்து அதன் முடிவிலிருந்து
சரணத்தைச் சரியாகத் தொடங்குவதில் அவருக்கு இணையாக இந்தியத் திரையிசை வரலாற்றிலேயே
யாரும் இருந்ததில்லை. இந்த நுணுக்கமான இசைக் கோர்ப்பில் அவருக்குப் பின் வந்த
இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் அவரே திகழ்கிறார்.
இளையராஜாவின்
பாடல்களில் மிகப்பெரும் தனித்துவமாக அவரின் இடையிசைக் குறும்பாடல்களைச்
சொல்லலாம். பாடல்களின் இடையிசைக்கு (பெரும்பாலும் இரண்டாவது இடையிசை) நடுவில்
ஏதாவது நாட்டுப்புற, நாடோடிப்
பாடல்களைச் சிறிய இசைத் துணுக்காகச் சேர்த்திருப்பார். செம்பருத்தி படத்தில் ‘கடலில எழும்புற அலைகளை கேளடி’ பாடலுக்கு நடுவில் ‘குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு’ என்று வரும் நான்கு
வரித் துணுக்குப் பாடலைக் கேட்க அத்துணை அற்புதமாக இருக்கும். இதெல்லாம் எப்படி
நிகழ்கிறது? அவரின் படைப்பூக்கம் நிகழ்த்தும் அதிசயம்தான்
இதெல்லாமும்.
இளையராஜா
இசையமைத்த ஒவ்வொரு படத்திலும் உணர முடிகிற ஒரு விதத் தனிச்சுவை (flavour) மற்றொரு அதிசயம். காதல், சோகம், வருணனை, கொண்டாட்டம், தத்துவம்,
நகைச்சுவை என்று பலதரப்பட்ட பாடல்கள் ஒரே படத்தில் இடம் பெற்றாலும், அததற்குரிய உணர்வுகளை அவை கொண்டிருந்தாலும் அவற்றிற்கு இடையில் ஒருவித
தனிச்சுவையை நம்மால் உணர முடியும். அந்தப் படத்துக்கு மட்டுமேயானதாக அது இருக்கும்.
பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் இரண்டு படங்களும்
கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வெளிவந்த, கிராமியக்
கதைக்களம் கொண்ட, ஒரே இயக்குனரின் படங்கள்தான். ஆனால்
பதினாறு வயதினிலே பாடல்களில் தெரியும் தனிச்சுவை கிழக்கே போகும் ரயில் பாடல்களில்
இருக்காது. அதற்குத் தனியான ஒரு ப்ளேவரைத் தந்திருப்பார். ஒவ்வொரு படத்திற்கும்
இதை எப்படிக் கொண்டு வருகிறார் என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
ராஜாவின்
இசையை மூன்று கட்டங்களாகப் பார்க்கலாம். இதில் முதல் கட்டம் எழுபதுகளின்
பிற்பாதியிலிருந்து எண்பதுகளின் பிற்பாதி வரையிலானது. இது அவரின் இசை தொடக்கத் தளத்திலிருந்து
மேலெழும்பி விண்ணில் பாய்ந்த காலகட்டம். இரண்டாம் கட்டம் எண்பதுகளின்
பிற்பாதியிலிருந்து தொண்ணூறுகளின் பிற்பாதி வரையிலானது. இது பழமையும் நவீனமும்
கலந்து நிதானமாக இயங்கிய காலகட்டம். திரையிசை புதிய மாற்றத்திற்கு உள்ளான காலம்.
இசையமைப்பில் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டம். இசைக்
கோர்ப்புக்கு இணையாக சப்தக் கலவையின் தரம் முக்கியமானதாக மாறியது. ரகுமானின்
வருகையோடு தொடங்கிய இந்தப் பாணி பெரிதாக வளர்ந்தது. மூன்றாம் கட்டம்
இரண்டாயிரத்துக்குப் பிந்தைய இருபத்தோராம் நூற்றாண்டுக் காலம். இசைக் கோர்வையைப்
பின்னுக்குத் தள்ளி சத்தங்களால் இடத்தை நிரப்பும் பாணிக்குத் திரையிசை
நகர்ந்துள்ளது. இன்று இசைக் கலைஞர்களே தேவையில்லாத நிலை உருவாகி,
எந்திரங்கள், கணினி வழியாக உருவாக்கப்படும்
இசைத் துணுக்குகளைக் கோர்த்து இசை உருவாக்கப்படுகிறது. இப்பாடல்களுக்கு
ஆயுட்காலம் (validity) குறைவு. வாத்தியக் கருவிகளிலிருந்தும்,
கலைஞர்களிடமிருந்து உருவாகாத இந்தப் பாடல்கள் எவ்வளவு ஹிட்டானாலும் சில
மாதங்களில், சில வாரங்களில் காணாமல் போய் விடுகின்றன. இந்த
மூன்று கட்டங்களிலுமே இளையராஜா இருக்கிறார்; இசைக்கிறார்.
ஆயிரம் படங்களைத் தாண்டி ஐம்பதாண்டுகளைத் தாண்டி அவரின் இசைப்பயணம் தொடர்கிறது
என்பதே யாரும் நிகழ்த்த முடியாத மாபெரும் சாதனை. திரையிசை மட்டுமின்றி How
to name it, Nothing but wind, India 24 Hours, The music messiah போன்ற
தனியிசை ஆல்பங்களும், சிம்பொனி இசையும், ரமண மாலை, திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களும்
அவருடைய சாதனைப் பட்டியலில் வரிசை கட்டி நிற்கின்றன.
ஆண்டு |
பாடல் |
படம் |
1976 |
அன்னக்கிளி
உன்னை தேடுதே |
அன்னக்கிளி |
1977 |
செந்தூரப்
பூவே |
16 வயதினிலே |
1978 |
நினைவோ
ஒரு பறவை |
சிவப்பு ரோஜாக்கள் |
1979 |
கண்மணியே
காதல் என்பது |
ஆறிலிருந்து
அறுபது வரை |
1980 |
என்
வானிலே ஒரே வெண்ணிலா |
ஜானி |
1981 |
அந்தி
மழை பொழிகிறது |
ராஜபார்வை |
1982 |
தும்பி
வா தும்பக்குடத்தின் |
ஓலங்கள் (மலையாளம்) |
1983 |
நகுவா
நயனா |
பல்லவி
அனுபல்லவி (கன்னடம்) |
1984 |
ரோஜா
ஒன்று முத்தம் |
கொம்பேறி
மூக்கன் |
1985 |
பூமாலையே
தோள் சேரவா |
பகல்
நிலவு |
1986 |
தேவனின்
கோயில் |
அறுவடை
நாள் |
1987 |
ராஜராஜசோழன்
நான் |
ரெட்டை
வால் குருவி |
1988 |
வளையோசை
கலகலவென |
சத்யா |
1989 |
கேளடி
கண்மணி |
புதுப்புது
அர்த்தங்கள் |
1990 |
மண்ணில்
இந்த காதலின்றி |
கேளடி
கண்மணி |
1991 |
சுந்தரி
கண்ணால் ஒரு சேதி |
தளபதி |
1992 |
மணியே
மணிக்குயிலே |
நாடோடி
தென்றல் |
1993 |
எந்தன்
நெஞ்சில் நீங்காத |
கலைஞன் |
1994 |
வனக்குயிலே |
பிரியங்கா |
1995 |
தென்றல்
வந்து தீண்டும் போது |
அவதாரம் |
1996 |
செம்பூவே
பூவே |
காலாபாணி
(மலையாளம்) |
1997 |
என்னைத்
தாலாட்ட வருவாளா |
காதலுக்கு
மரியாதை |
1998 |
மீட்டாத
ஒரு வீணை |
பூந்தோட்டம் |
1999 |
இளவேனிற்கால பஞ்சமி |
மனம்
விரும்புதே உன்னை |
2000 |
நீ
பார்த்த பார்வைக்கொரு |
ஹே
ராம் |
2001 |
என்
மனவானில் சிறகை |
காசி |
2002 |
ஒளியிலே
தெரிவது |
அழகி |
2003 |
இளங்காத்து
வீசுதே |
பிதாமகன் |
2004 |
உன்ன
விட இந்த உலகத்தில் |
விருமாண்டி |
2005 |
காற்றில்
வரும் கீதமே |
ஒரு
நாள் ஒரு கனவு |
2006 |
ஆற்றின்
கரையோரத்தே |
ராசதந்த்ரம்
(மலையாளம்) |
2007 |
ஜானே
தோனா |
சீனி
கம் (இந்தி) |
2008 |
கல்லாய்
இருந்தேன் |
உளியின்
ஓசை |
2009 |
குன்னத்தே |
கேரளவர்மா
பழசிராஜா (மலையாளம்) |
2010 |
ஆரோ
பாடுன்னு தூரே |
கத
துடருன்னு |
2011 |
ஜகதானந்தகாரகா |
ஸ்ரீராமராஜ்யம்
(தெலுங்கு) |
2012 |
சற்று
முன்பு பார்த்த |
நீதானே
என் பொன்வசந்தம் |
2013 |
எ
ஃபேரி டேல் (தீம்) |
ஓநாயும்
ஆட்டுக்குட்டியும் |
2014 |
ஈரமாய்
ஈரமாய் |
உன்
சமையலறையில் |
2015 |
புன்னமி
புவ்வை |
ருத்ரமதேவி
(தெலுங்கு) |
2016 |
ஹீரோ
அறிமுக இசை |
தாரை
தப்பட்டை |
2017 |
ஓலத்தின் |
கிளின்ட் |
2018 |
கேக்காத
வாத்தியம் |
மேற்குத்
தொடர்ச்சி மலை |
2019 |
மேரா
தோ சாந்த் ஹே |
ஹப்பி
(இந்தி) |
2020 |
நீங்க
முடியுமா |
சைக்கோ |
2021 |
எந்த
எந்த சூசினா |
கமனம்
(தெலுங்கு) |
2022 |
மாயோனே
மணிவண்ணா |
மாயோன் |
2023 |
ஒன்னோட
நடந்தா |
விடுதலை – பாகம்
1 |
2024 |
தினம்
தினமும் |
விடுதலை
–
பாகம்
2 |
2025 |
ஒரு
மனைவியாய் |
பேரன்பும்
பெருங்கோபமும் |
No comments:
Post a Comment
கருத்துக்கள்