குருதிக் காட்சிகளும் குற்றச் சமூகமும் - கணேஷ் சுப்ரமணி

'வாட்ஸ் அப்' எனும் விசித்திர பூதம் தொடர்ந்து காட்சிகளைத் துப்புகிறது. குருதி படிந்த சில காணொளிக் காட்சிகள் சிந்தனையை உறையச் செய்கின்றன. கைகள் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டிக்கும் காட்சி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நிறைந்த சாலை நடுவில் சிறை பிடிக்கப்பட்ட ஒருவரின் தலையைத் துண்டிக்கும் காட்சி, ஓர் இளம் பெண்ணை 'ஒழுக்க சீலர்கள்' பலர் சேர்ந்து பொது இடத்தில் கடுமையாகத் தாக்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தும் காட்சி, மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஏற முயலும் ஒருவரை ரயில் நசுக்கிச் சிதறடிக்கும் காட்சி என நீளும் பட்டியலை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால் இக்காட்சிகள், வாட்ஸ் அப்பில் விழித்து, வாட்ஸ் அப்பில் வாழ்ந்து, வாட்ஸ் அப்பிலேயே தூங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் செல்போன்களில் நிறைந்து கிடக்கின்றன.